இன்னா நாற்பதும் - இனியவை நாற்பதும்
இன்னா நாற்பது பாடல்களுக்கும் இனியவை நாற்பது பாடல்களுக்கும் கருத்தொற்றுமை மிகுதி. இன்னா நாற்பது இவையிவை துன்பம் தரும் என்று கூறினால், இனியவை நாற்பது அவை இல்லாதிருத்தல் இனிமை என்று கூறும் வகையில் எதிர்மொழியாக அமைந்துள்ளது. அந்தவகையில் கருத்தொற்றுமை உள்ள வரிகளுள் ஒரு பத்து எடுத்துக்காட்டுகள் இங்கு ஒப்பிடும் நோக்கில் தரப்பட்டுள்ளது.
பிற உயிர்களின் உடலை உண்டு தன் உடலை வளர்த்துக் கொள்வது:
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே (இனியவை பாடல் - 4)
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா (இன்னா பாடல் - 22)
பிறன்மனை நோக்கா பேராண்மை:
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது (இனியவை பாடல் - 5)
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (இன்னா பாடல் - 38)
குழந்தைகள் நோய் வாய்ப்படுவது:
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (இனியவை பாடல் - 12)
குழவிகள் உற்ற பிணி இன்னா (இன்னா பாடல் - 35)
உயிர்க்கொலை தவிர்ப்பது:
கொல்லாமை முன்இனிது (இனியவை பாடல் - 5)
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா (இன்னா பாடல் - 12)
இருளில் வெளியில் செல்லாதிருப்பது:
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே (இனியவை பாடல் - 34)
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா (இன்னா பாடல் - 10)
உறவுகள் இல்லாத ஊரில் வாழாதிருப்பது:
பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே (இனியவை பாடல் - 40)
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா (இன்னா பாடல் - 25)
நன்னெறி நூல்களை விரும்பிக் கற்பது:
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய கற்றலின் காழ் இனியது இல் (இனியவை பாடல் - 40)
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா (இன்னா பாடல் - 34)
அரசர் யானைப்படையைக் கொண்டிருப்பது:
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை மத முழக்கம் கேட்டல் இனிது (இனியவை பாடல் - 15)
யானை இல் மன்னரை காண்டல் நனி இன்னா (இன்னா பாடல் - 22)
பெரியோர் துணையைச் சேர்ந்திருத்தல்:
இனிதே தெற்றவும் மேலாயார் சேர்வு (இனியவை பாடல் - 1)
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா (இன்னா பாடல் - 26)
தீயவர்களை விட்டு விலகி வாழ்வது:
கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே (இனியவை பாடல் - 29)
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா (இன்னா பாடல் - 24)
இன்னா நாற்பது பாடல்களில் காணப்படுவது போலவே;
"யானையுடை படை காண்டல் மிக இனிதே" [பாடல் - 4]
என்று யானைப்படை கொண்டிருப்பதன் சிறப்பு போன்ற காலத்திற்குப் பொருந்திடாத கருத்தும்,
"ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே" [பாடல் - 23]
என்று பார்ப்பனருக்குக் கொடை அளிப்பது நன்மை தரும் என்ற காலத்திற்கு ஒவ்வாத கருத்தும்,
"தட மென் பணை தோள் தளிர் இயலாரை விடம் என்று உணர்தல் இனிது" [பாடல் - 37]
என்று பெண்மையைப் போற்றாது பெண்களை நஞ்சுடன் ஒப்பிடும் கருத்தும்
தவிர்த்தால் அறநெறி வழி நடக்க நூற்றுக்கும் குறையாத அறிவுரைகள் இனியவை நாற்பது பாடல்களில் உள்ளன.
No comments:
Post a Comment