Friday, September 6, 2019

இனியவை நாற்பது



இனியவை நாற்பது குறிப்பிடும் இனியவை

— தேமொழி —



          'நானாற்பது' என அறியப்படும், பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களுள் இரண்டாவது நூல், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எழுதிய 'இனியவை நாற்பது' என்ற நூல்.  ஒவ்வொன்றும்  வாழ்க்கைக்கு 'நன்மை தருவனவற்றை' அல்லது 'இன்பம் தருவனவற்றை', 'இனியவை' எனக் கூறும் 40 பாடல்கள் கொண்ட தொகுதி என்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.  'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்ற பெயர்களும் இந்த நூலையே குறிக்கும். 



          இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல்  மும்மூர்த்திகளான  சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.  பிரம்மாவைக் குறித்துக் குறிப்பிடுவதாலும், இன்னா நாற்பது கருத்துகளினை அடியொட்டி எழுதப்பட்டுள்ள  கருத்துகளாலும் இந்த நூல் இன்னா நாற்பது நூலுக்குப் பிறகு தோன்றியது என்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தது எனவும் கணிக்கப்படுகிறது. 

          கடவுள் வாழ்த்து தவிர்த்து 40 பாடல்கள்  இனியவை நாற்பது நூலில் உள்ளன.  பஃறொடை வெண்பா வடிவில் அமைந்த ஒரு பாடல் ('ஊரும் கலிமா' எனத் தொடங்கும் 8 ஆம் பாடல்)  தவிர்த்து  ஏனைய பாடல்கள் இன்னிசை வெண்பா வடிவில் அமைந்த பாடல்கள். ஒவ்வொரு பாடலும் வாழ்க்கைக்கு நன்மை தருவனவற்றை இனியவை எனக் கூறிச் செல்கின்றன.  



          இன்னா நாற்பது பாடலின் நான்கு வரிகளில், வரிகளுக்கு ஒன்றாக ஒவ்வொரு பாடலும் நான்கு துன்பம் தருவனவற்றைக் கூறியதால் கடவுள் வாழ்த்தும் ஏனைய நாற்பது பாடல்களும் மொத்தம் 164 இன்னாதவற்றைக் கூறின.  ஆனால், இனியவை நாற்பது நூல் முழுவதும் அது போன்ற சீரான முறையில் அமைந்திருக்கவில்லை. அதனால்  மொத்தம் 127 இனியவையாகக் கூறப்பட்டுள்ளன. நான்கு பாடல்கள் (1, 3, 4, 5) வரிக்கு ஒன்றாக 4 இனியவற்றைக் கூறினாலும், மற்ற 37 பாடல்களில் முதல் இரு வரிகளும் கடைசி வரியும் இனியவை  என 3 இனியனவற்றைக் குறிப்பிடுகின்றன.  இன்னா நாற்பது போலவே இனியவை நாற்பதிலும் கடவுள் வாழ்த்து மட்டுமே கடவுளைக் குறிப்பிடும் பாடல்.  மற்ற பாடல்களில் சமயக் குறிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.  


          இன்னா நாற்பது பாடல்களில் காணப்படுவது போலவே; 
"யானையுடை படை காண்டல் மிக இனிதே" [பாடல் - 4] 
என்று யானைப்படை கொண்டிருப்பதன்  சிறப்பு போன்ற காலத்திற்குப் பொருந்திடாத கருத்தும், 
"ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே" [பாடல் - 23] 
என்று பார்ப்பனருக்குக் கொடை அளிப்பது  நன்மை தரும் என்ற காலத்திற்கு ஒவ்வாத கருத்தும்,  
"தட மென் பணை தோள் தளிர் இயலாரை விடம் என்று உணர்தல் இனிது" [பாடல் - 37] 
என்று பெண்மையைப் போற்றாது பெண்களை நஞ்சுடன் ஒப்பிடும் கருத்தும் 
தவிர்த்தால்  அறநெறி வழி நடக்க நூற்றுக்கும் குறையாத அறிவுரைகள் இனியவை நாற்பது பாடல்களில் உள்ளன. 




உதவிய நூல்:
பூதஞ்சேந்தனார் இயற்றிய 'இனியவை நாற்பது'—
திரு. வா. மகாதேவ முதலியாரவர்கள் உரை, 1922,
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
தமிழ் இணையக் கல்விக்கழகம் - பதிப்பு:
http://www.tamilvu.org/library/l2500/html/l2500bod.htm

நன்றி:
தமிழ் இலக்கியத் தொடரடைவு - முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-INIYA40-TEXT.html

___
















































கடவுள் வாழ்த்து - கண் மூன்று உடையான்



கடவுள் வாழ்த்து - கண் மூன்று உடையான்


கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே
முந்துற பேணி முகம் நான்கு உடையானை
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது

எவை நன்மை தரும்:
மூன்று கண்களைக் கொண்ட சிவனின் அடி பணிதல், 
பழமையான சிறப்புமிகுந்த துளசி மாலை அணிந்த திருமாலைத் தொழுதல், 
முகம் நான்கு கொண்ட பிரம்மனை வழிபடுதல், 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṇ mūṉṟu uṭaiyāṉ tāḷ cērtal kaṭitu iṉitē
tol māṇ tuḻāy mālaiyāṉai toḻal iṉitē
muntuṟa pēṇi mukam nāṉku uṭaiyāṉai
ceṉṟu amarntu ēttal iṉitu


---




1. பிச்சை புக்குஆயினும் கற்றல்



1.  பிச்சை புக்குஆயினும் கற்றல்


பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே
தெற்றவும் மேலாயார் சேர்வு

எவை நன்மை தரும்:
பிச்சை எடுத்தாலாவது கல்வியைக் கற்பது,
அவ்வாறு கற்ற கல்வி தக்க நேரத்தில் ஆன்றோர் அவையில் உதவுவது, 
முத்துப்பல் புன்முறுவல் கொண்ட பெண்களின் வாய்மொழி, 
பெரியோர் துணையைச் சேர்ந்திருத்தல்,
ஆகியன நன்மை தருவனவாம்.

Piccai pukku'āyiṉum kaṟṟal mika iṉitē
nal capaiyil kaikkoṭuttal cālavum muṉ iṉitē
muttu ēr muṟuvalār col iṉitu āṅku iṉitē
teṟṟavum mēlāyār cērvu


---




2. உடையான் வழக்கு இனிது



2.  உடையான் வழக்கு இனிது


உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நான்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
உடையான் வழக்கு இனிது ஒப்ப முடிந்தால்
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதாம்ஆயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத்தான் இனிது நன்கு

எவை நன்மை தரும்:
செல்வம் உள்ளவர் கொடையளிப்பது,
மனமொத்த கணவன் மனைவியின் இல்வாழ்க்கை, 
உலக வாழ்வின் நிலையாமை உணர்ந்து தாமதிக்காது பற்றறுத்து துறவறம் மேற்கொள்வது,  
ஆகியன நன்மை தருவனவாம்.

Uṭaiyāṉ vaḻakku iṉitu oppa muṭintāl
maṉai vāḻkkai muṉ iṉitu māṇātāmāyiṉ
nilaiyāmai nōkki neṭiyār tuṟattal
talaiyākattāṉ iṉitu naṉku


---




3. ஏவது மாறா இளம் கிளைமை



3.  ஏவது மாறா இளம் கிளைமை


ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஏவது மாறா இளம் கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே
தேரின் கோள் நட்பு திசைக்கு

எவை நன்மை தரும்:
பெற்றோர் சொல்லை மீறாத மக்களைக் கொண்டிருப்பது, 
பிழையற நாளும் கல்வியினைக் கற்பது,
ஏருடைய உழவருக்கு வேளாண்மை செய்வது,
செல்லும் திசையெல்லாம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ēvatu māṟā iḷam kiḷaimai muṉ iṉitē
nāḷum navai pōkāṉ kaṟṟal mika iṉitē
ēruṭaiyāṉ vēḷāṇmaitāṉ iṉitu āṅku iṉitē
tēriṉ kōḷ naṭpu ticaikku


---




4. யானையுடை படை காண்டல்



4.  யானையுடை படை காண்டல்


யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
யானையுடை படை காண்டல் மிக இனிதே
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே
கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே
மானம் உடையார் மதிப்பு

எவை நன்மை தரும்:
அரசர் யானைப்படையைக்  கொண்டிருப்பது, 
பிற உயிர்களைக் கொன்று உண்டு தனது உடலை வளர்க்காதிருப்பது, 
ஆற்றின் கரைகளில் பூம்பொழில்கள் கொண்ட ஊரில் வாழ்வது, 
மதிக்கத் தக்கவரைப் போற்றுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Yāṉaiyuṭai paṭai kāṇṭal mika iṉitē
ūṉai tiṉṟu ūṉai perukkāmai muṉ iṉitē
kāṉ yāṟṟu aṭaikarai ūr iṉitu āṅku iṉitē
māṉam uṭaiyār matippu


---




5. கொல்லாமை முன் இனிது



5.  கொல்லாமை முன் இனிது


கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன்
செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு

எவை நன்மை தரும்:
எந்தவொரு உயிரையும் கொல்லாதிருப்பது, 
நடுநிலை தவறி தகுதியற்றோரைப் பாராட்டாதிருப்பது, 
முறைதவறித் தீங்கிழைத்து செங்கோல் தவறாதிருப்பது, 
எவர் திறமையிலும் குற்றம் கண்டு குறை கூறாதிருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kollāmai muṉ iṉitu kōl kōṭi mārāyaṉ
ceyyāmai muṉ iṉitu ceṅkōlaṉ ākutal
eytum tiṟattāl iṉitu eṉpa yārmāṭṭum
pollāṅku uraiyāmai naṉku


---




6. ஆற்றும் துணையால் அறம்



6.  ஆற்றும் துணையால் அறம்


ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே
வாய்ப்பு உடையாராகி வலவைகள் அல்லாரை
காப்பு அடைய கோடல் இனிது

எவை நன்மை தரும்:
இயன்றவரை கொடையளித்து உதவுவது, 
சான்றோர் கூறும் சிறப்புமிக்க அறிவுரை, 
செருக்கற்ற,  தகுதிகள் பல கொண்டவரின் துணை, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Āṟṟum tuṇaiyāl aṟam ceykai muṉ iṉitē
pāṟpaṭṭār kūṟum payamoḻi māṇpu iṉitē
vāyppu uṭaiyārāki valavaikaḷ allārai
kāppu aṭaiya kōṭal iṉitu


---




7. அந்தணர் ஓத்துடைமை



7.  அந்தணர் ஓத்துடைமை


அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது

எவை நன்மை தரும்:
பார்ப்பனர் மறை ஓதுவதை மறக்காதிருப்பது, 
உறவுகளின் மீது பற்று கொண்டவர் படைக்குத் தலைமை ஏற்பது,
தந்தையே கூறினாலும் அவரது அறமற்ற அறிவுரையை ஏற்காதிருப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.

Antaṇar ōttuṭaimai āṟṟa mika iṉitē
pantam uṭaiyāṉ paṭaiyāṇmai muṉ iṉitē
tantaiyē'āyiṉum tāṉ aṭaṅkāṉ ākumēl
koṇṭu aṭaiyāṉ ākal iṉitu


---




8. ஊரும் கலி மா உரன் உடைமை



8.  ஊரும் கலி மா உரன் உடைமை 


ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது

எவை நன்மை தரும்:
போர்வீரர் வலிமையான குதிரையைப் பெற்றிருப்பது,
மாலையணிந்த மன்னர் போர்க்களத்தில் கரிய மலைகளை ஒத்த யானைகளை வெல்வது, 
அன்புடையவர் கலங்காது வழிநடத்தும் வகையில் நல்ல வினாக்களை எழுப்புவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ūrum kali mā uraṉ uṭaimai muṉ iṉitē
tār puṉai maṉṉar tamakku uṟṟa vem camattu
kār varai pōl yāṉai katam kāṇṭal muṉ iṉitē
ārvam uṭaiyār āṟṟavum nallavai
pētuṟār kēṭṭal iṉitu


---




9. தங்கண் அமர்பு உடையார்



9.  தங்கண் அமர்பு உடையார்


தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே
அம் கண் விசும்பின் அகல் நிலா காண்பு இனிதே
பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது

எவை இன்பம் தரும்:
தம்முடன் நட்பிலிருப்பவர் செல்வந்தராக இருப்பது, 
அகன்ற வானில் முழுநிலவைக் காண்பது, 
குற்றம் இழைக்காதவராக எவரிடமும் இரக்கம் கொள்ளும் அன்புடையவராய் வாழ்வது, 
ஆகியன இன்பம் தருவனவாம்.

Taṅkaṇ amarpu uṭaiyār tām vāḻtal muṉ iṉitē
am kaṇ vicumpiṉ akal nilā kāṇpu iṉitē
paṅkam il ceykaiyar āki parintu yārkkum
aṉpuṭaiyar ātal iṉitu


---




10. கடம் உண்டு வாழாமை



10.  கடம் உண்டு வாழாமை


கடமுண்டு வாழாமை காண்டல்இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு

எவை நன்மை தரும்:
கடன்பட்டு வாழும் வாழ்வை வாழாமலிருப்பது, 
பண்பற்ற பெண்களுடன் உறவு கொள்ளாதிருப்பது, 
தீங்கிழைப்பவரிடம்  இருந்து அஞ்சி விலகிவிடுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṭam uṇṭu vāḻāmai kāṇṭal iṉitē
niṟai māṇpu il peṇṭirai nīkkal iṉitē
maṉa māṇpu ilātavarai añci akaṟal
eṉai māṇpum tāṉ iṉitu naṉku


---




11. அதர் சென்று வாழாமை



11.  அதர் சென்று வாழாமை


அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா
பெருமை போல் பீடு உடையது இல்

எவை நன்மை தரும்:
முறை தவறிய வாழ்வை வாழாதிருப்பது, 
தவறாகப் பொருள் உணர்ந்து கொள்ளாத மதிநுட்பம், 
உயிரே போனாலும் விருந்தோம்பல் இல்லா இடத்தில் உண்டு மதிப்பிழக்காமல் இருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Atar ceṉṟu vāḻāmai āṟṟa iṉitē
kutar ceṉṟu koḷḷāta kūrmai iṉitē
uyir ceṉṟu tām paṭiṉum uṇṇār kaittu uṇṇā
perumai pōl pīṭu uṭaiyatu il


---




12. குழவி பிணி இன்றி வாழ்தல்



12.  குழவி பிணி இன்றி வாழ்தல்


குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார் சேரும்
திருவும் தீர்வு இன்றேல் இனிது

எவை நன்மை தரும்:
குழந்தைகள் நோயற்று வாழ்வது,
ஆன்றோர் அவையில் துணிவுடன் கருத்துரைக்க உதவும் கல்வி,
தெளிந்த அறிவுடைய பண்பாளரின் செல்வம் அவரிடம் நிலைத்திருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kuḻavi piṇi iṉṟi vāḻtal iṉitē
kaḻaṟum avai añcāṉ kalvi iṉitē
mayarikaḷ allarāy māṇpuṭaiyār cērum
tiruvum tīrvu iṉṟēl iṉitu


---




13. மானம் அழிந்த பின் வாழாமை



13.  மானம் அழிந்த பின் வாழாமை


மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே
தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது

எவை நன்மை தரும்:
பெருமை அழிந்த பிறகு வாழாதிருப்பது,
வரவுக்குள் செலவு செய்து வாழ்வது,
குறைவற்ற, சிறந்த செல்வம் உடையவராய் வாழ்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Māṉam aḻinta piṉ vāḻāmai muṉ iṉitē
tāṉam aḻiyāmai tāṉ aṭaṅki vāḻvu iṉitē
ūṉam oṉṟu iṉṟi uyarnta poruḷ uṭaimai
māṉiṭavarkku ellām iṉitu


---




14. குழவி தளர் நடை காண்டல்



14.  குழவி தளர் நடை காண்டல்


குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குழவி தளர் நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து
மனன் அஞ்சான் ஆகல் இனிது

எவை இன்பம் தரும்:
குழந்தைகளின் தளர் நடையைக் காண்பது,
அவர்களது மழலைச்சொல்  கேட்பது,
தீயவர்  சினத்துடன் துன்புறுத்துகையில் அஞ்சா நெஞ்சம் கொண்டிருப்பது, 
ஆகியன இன்பம் தருவனவாம்.

Kuḻavi taḷar naṭai kāṇṭal iṉitē
avar maḻalai kēṭṭal amiḻtiṉ iṉitē
viṉaiyuṭaiyāṉ vantu aṭaintu veytu uṟum pōḻtu
maṉaṉ añcāṉ ākal iṉitu


---




15. பிறன் மனை பின் நோக்கா பீடு



15.  பிறன் மனை பின் நோக்கா பீடு


பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது

எவை நன்மை தரும்:
பிறர் மனைவியைத் திரும்பியும் பாராத பெருமை, 
வறட்சியால் வாடும் பயிர்களுக்கு வான்மழை பொழிவது, 
வீரமிக்க மன்னவரின் கோட்டையின் புறத்தே மலை போன்ற யானைகள் பிளிறுவதைக்  கேட்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Piṟaṉ maṉai piṉ nōkkā pīṭu iṉitu āṟṟa
vaṟaṉ uḻakkum paim kūḻkku vāṉ cōrvu iṉitē
maṟa maṉṉar tam kaṭaiyuḷ mā malai pōl yāṉai
mata muḻakkam kēṭṭal iṉitu


---




16. கற்றார் முன் கல்வி உரைத்தல்



16.  கற்றார் முன் கல்வி உரைத்தல்


சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகுஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது

எவை நன்மை தரும்:
கற்றோர் முன் தனது கல்வித் திறமையைக் காட்டுவது, 
அறிவிற் சிறந்தோரைத் துணையாகக் கொள்வது, 
எள்ளளவும் பிறரிடம் பொருள் பெறாது தான் பிறருக்குக் கொடையளிப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṟṟār muṉ kalvi uraittal mika iṉitē
mikkārai cērtal mika māṇa muṉ iṉitē
eḷ tuṇaiyāṉum iravātu tāṉ ītal
ettuṇaiyum āṟṟa iṉitu


---




17. நட்டார்க்கு நல்ல செயல்



17.  நட்டார்க்கு நல்ல செயல்

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே
பற்பல தானியத்ததாகி பலர் உடையும்
மெய் துணையும் சேரல் இனிது

எவை நன்மை தரும்:
நண்பர்களுக்கு நன்மை செய்வது,
எதிரிகளையும் நண்பராக்கிக் கொள்வது, 
பல கருவிகள் ஆளும் தன்மை கொண்ட மெய்க்காப்பாளர் துணை இருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Naṭṭārkku nalla ceyal iṉitu ettuṇaiyum
oṭṭārai oṭṭi koḷal ataṉiṉ muṉ iṉitē
paṟpala tāṉiyattatāki palar uṭaiyum
mey tuṇaiyum cēral iṉitu


---




18. மன்றில் முது மக்கள் வாழும் பதி



18.  மன்றில் முது மக்கள் வாழும் பதி


மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மன்றில் முது மக்கள் வாழும் பதி இனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே
எஞ்சா விழு சீர் இரு முது மக்களை
கண்டு எழுதல் காலை இனிது

எவை நன்மை தரும்:
சான்றோர் கூடும் அறங்கூறும் அவை உள்ள ஊரில் வாழ்வது 
அறநூல் உரைத்தவாறு தவநெறியில் வாழ்பவரின் பெருமை 
மிக்க சிறப்புடைய பெற்றோரைக் காலையில் தொழுது எழுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Maṉṟil mutu makkaḷ vāḻum pati iṉitē
tantirattiṉ vāḻum tavacikaḷ māṇpu iṉitē
eñcā viḻu cīr iru mutu makkaḷai
kaṇṭu eḻutal kālai iṉitu


---




19. நட்டார் புறங்கூறான் வாழ்தல்



19.  நட்டார் புறங்கூறான் வாழ்தல்


நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நட்டார் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
பட்டாங்கு பேணி பணிந்து ஒழுகல் முன் இனிதே
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது

எவை நன்மை தரும்:
நண்பர்களைக் குறை கூறாமல் வாழ்வது,
வழக்காற்றை மதித்து அதற்கேற்ப வாழ்வது, 
குறைவறப் பெரும்பொருள் ஈட்டி தேவையானவருக்குக் கொடுத்துதவி வாழ்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Naṭṭār puṟaṅkūṟāṉ vāḻtal naṉi iṉitē
paṭṭāṅku pēṇi paṇintu oḻukal muṉ iṉitē
muṭṭu il perum poruḷ ākkiyakkāl maṟṟu'atu
takkuḻi ītal iṉitu


---




20. சலவரை சாரா விடுதல்



20. சலவரை சாரா விடுதல்


சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சலவரை சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
வஞ்சகர்களுடன் சேராதிருத்தல், 
ஆன்றோர் அறவுரை வழிநடத்தல், 
அகன்ற இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் உரிமையுடன் வாழ்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Calavarai cārā viṭutal iṉitē
pulavartam vāymoḻi pōṟṟal iṉitē
malartalai ñālattu maṉṉuyirkku ellām
takutiyāl vāḻtal iṉitu


---




21. பிறன்கை பொருள் வெளவான்



21.  பிறன்கை பொருள் வெளவான்


பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேரா
திறம் தெரிந்து வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
பிறர் செல்வத்தைக் கவர்ந்து வாழாமல் இருப்பது,
அறம் வழியில் நடப்பதும், தீமை செய்யாதிருப்பதும்,
தவறியும் பண்பில்லா குழப்பவாதிகளைத் துணை கொள்ளாமல் வாழ்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Piṟaṉkai poruḷ vowvāṉ vāḻtal iṉitē
aṟampurintu allavai nīkkal iṉitē
maṟantēyum māṇā mayarikaḷ cērā
tiṟam terintu vāḻtal iṉitu


---




22. வருவாய் அறிந்து வழங்கல்



22.  வருவாய் அறிந்து வழங்கல்

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார்
திரிபு இன்றி வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
தனது வருமானத்திற்கு ஏற்ப வழங்குவது, 
ஒருவரையும் சார்ந்து வாழாத மனத்திட்பம், 
மிக்க பலன் தரும் என்றாலும் விரும்பியவற்றை ஆராயாமல் செய்வதைத் தவிர்ப்பதுடன் அந்த இயல்பிலிருந்து மாறாது செயல்படுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Varuvāy aṟintu vaḻaṅkal iṉitē
oruvar paṅku ākāta ūkkam iṉitē
peru vakaittu'āyiṉum peṭṭavai ceyyār
tiripu iṉṟi vāḻtal iṉitu


---




23. காவோடு அற குளம் தொட்டல்



23.  காவோடு அற குளம் தொட்டல்


காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
காவோடு அற குளம் தொட்டல் மிக இனிதே
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி
சூதரை சோர்தல் இனிது

எவை நன்மை தரும்:
அறச்செயலாக சோலை அமைத்து, குளம் வெட்டுவது, 
அந்தணர்களுக்கு பசுவும் பொன்னுமாக கொடை அளிப்பது, 
பழிக்கு அஞ்சாமல், சூதுக்கு அடிமையாகி பொய்யுரைத்து  வாழும் சூதாடுபவர்களை விலக்கிவிடுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kāvōṭu aṟa kuḷam toṭṭal mika iṉitē
āvōṭu poṉ ītal antaṇarkku muṉ iṉitē
pāvamum añcārāy paṟṟum toḻil moḻi
cūtarai cōrtal iṉitu


---




24. வெல்வது வேண்டி வெகுளாதான்



24.  வெல்வது வேண்டி வெகுளாதான்


வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது

எவை நன்மை தரும்:
வென்றுவிடவேண்டும் என்ற  துடிப்பால் வெகுண்டு எழாத கட்டுப்பாடு, 
இயன்றவரை மேற்கொண்ட செயலை முடித்துவிட விரும்பும் பொறுமை, 
கிட்டாதவற்றுக்காக ஏங்கித் துயருற்று இரங்கத்தக்க நிலைக்குச் செல்லாது இயன்றதைச் செய்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Velvatu vēṇṭi vekuḷātāṉ nōṉpu iṉitē
ollum tuṇaiyum oṉṟu uyppāṉ poṟai iṉitē
illatu kāmuṟṟu iraṅki iṭarppaṭār
ceyvatu ceytal iṉitu


---




25. ஐவாய் வேட்கை அவா அடக்கல்



25.  ஐவாய் வேட்கை அவா அடக்கல்


ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே
நில்லாத காட்சி நிறை இல் மனிதரை
புல்லா விடுதல் இனிது

எவை நன்மை தரும்:
ஐம்புலன்களின் தூண்டுதலால் வரும் ஆசைகளை விட்டொழிப்பது,  
கைமேல் பணம் வரும் என்றாலும் கல்லாதவர் தொடர்பை விட்டுவிடுவது, 
நிலையற்ற மனம் கொண்ட  குணமற்றவருடன் சேராது விலகிவிடுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ai vāy vēṭkai avā aṭakkal muṉ iṉitē
kaivāy poruḷ peṟiṉum kallārkaṇ tīrvu iṉitē
nillāta kāṭci niṟai il maṉitarai
pullā viṭutal iṉitu


---



26. நச்சி தற்சென்றார் நசை கொல்லா



26.  நச்சி தற்சென்றார் நசை கொல்லா


நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நச்சி தற்சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே
எ திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல்

எவை நன்மை தரும்:
ஒன்றை விரும்பித் தன்னிடம் வந்தவரின் விருப்பத்தை அழிக்காது நிறைவேற்றும் பண்பு, 
மதிப்பளிக்காத இடத்தில் வாழவிரும்பாத மனத்திட்பம், 
எவ்வகையிலும் தன்னால் வழங்க இயன்றதை மறைக்காது வழங்கும் அன்பு, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Nacci taṟceṉṟār nacai kollā māṇpu iṉitē
uṭku ilvaḻi vāḻā ūkkam mika iṉitē
e tiṟattāṉum iyaiva karavāta
paṟṟiṉil pāṅku iṉiyatu il


---




27. தானம் கொடுப்பான் தகை ஆண்மை



27.  தானம் கொடுப்பான் தகை ஆண்மை 


தானங் கொடுப்பான் தகையாண்மைமுன்இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது

எவை நன்மை தரும்:
உதவி நல்குவோரின் அருளுடைமை,  
மதிப்பிழந்த பின் உயிர்வாழாமை,  
குற்றம் பார்க்காதவர் நன்மை தருவனவற்றை முறைப்படி ஏற்றுக் கொள்ளுதல், 
ஆகியன நன்மை தருவனவாம்.

Tāṉam koṭuppāṉ takai āṇmai muṉ iṉitē
māṉam paṭa variṉ vāḻāmai muṉ iṉitē
ūṉam koṇṭāṭār uṟuti uṭaiyavai
kōḷ muṟaiyāl kōṭal iṉitu


---


28. ஆற்றானை ஆற்று என்று அலையாமை



28.  ஆற்றானை ஆற்று என்று அலையாமை


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்

எவை நன்மை தரும்:
செய்துமுடிக்கும் திறமை இல்லாதவரிடம் அந்த வேலையை ஒப்படைக்காது  இருப்பது, 
உயிர்வாழ்தல் நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து வாழ்வது, 
செல்வம் கைவிட்டுப்போகும் என்றாலும் அறமற்ற சொற்களைக் கூறிவிடாத அறிவிருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Āṟṟāṉai āṟṟu eṉṟu alaiyāmai muṉ iṉitē
kūṟṟam varavu uṇmai cintittu vāḻvu iṉitē
ākkam aḻiyiṉum allavai kūṟāta
tērcciyil tērvu iṉiyatu il


----





29. கயவரை கை இகந்து வாழ்தல்



29.  கயவரை கை இகந்து வாழ்தல்


கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
ஒளி பட வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
தீயவர்களை விட்டு விலகி வாழ்வது, 
வாழ்வில் உயரவேண்டும் என்ற முனைப்பு தோன்றுவது, 
இல்லாதவரை ஏளனம் செய்யாதவர் இவரென்று போற்றப்படும் நிலையில் வாழ்வது,  
ஆகியன நன்மை தருவனவாம்.

Kayavarai kai ikantu vāḻtal iṉitē
uyarvu uḷḷi ūkkam piṟattal iṉitē
eḷiyar ivar eṉṟu ikaḻntu uraiyārāki
oḷi paṭa vāḻtal iṉitu


---






30. நன்றி பயன் தூக்கி வாழ்தல்





30.  நன்றி பயன் தூக்கி வாழ்தல்


நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே
மன்ற கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே
அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல்

எவை நன்மை தரும்:
பெற்ற உதவியை நன்றியுடன் நினைத்து வாழ்வது, 
நீதிமன்றத்தில் பொய் உரைத்திடாத  மேன்மை, 
அடைக்கலமாகக் கொடுத்த பொருளை அறிந்தவர் யாரும் இல்லை என்று அதனைக் கவர எண்ணாத நேர்மை, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Naṉṟi payaṉ tūkki vāḻtal naṉi iṉitē
maṉṟa koṭumpāṭu uraiyāta māṇpu iṉitē
aṉṟu aṟivār yār eṉṟu aṭaikkalam veḷavāta
naṉṟiyiṉ naṉku iṉiyatu il


---



31. அடைந்தார் துயர் கூரா ஆற்றல்



31.  அடைந்தார் துயர் கூரா ஆற்றல்


அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது

எவை நன்மை தரும்:
உதவி நாடி வந்த துயருற்றவரின் துன்பத்தைக் குறைப்பது, 
கடன் வாங்கியாவது செய்யவேண்டிய கடமைகளைச் செய்வது, 
அறிவிற் சிறந்தவர் என்றாலும் ஆராய்ந்த பின்னர் தம் கருத்தை வெளிப்படுத்துவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Aṭaintār tuyar kūrā āṟṟal iṉitē
kaṭaṉ koṇṭum ceyvaṉa ceytal iṉitē
ciṟantu amainta kēḷviyar'āyiṉum ārāyntu
aṟintu uraittal āṟṟa iṉitu

---




32. கற்று அறிந்தார் கூறும் கரும பொருள்





32.  கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் 


கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் இனிதே
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல்

எவை நன்மை தரும்:
கற்றோர் சொல்லும் பயன் தரும் அறிவுரை, 
குடிமக்களின் நலன் கருதாத அரசின் கீழ் வாழாதிருப்பது, 
ஆராயாது ஊறு விளைவித்தவரைத் தண்டிக்காது அவரிடம் அன்புகாட்டுவது,  
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṟṟu aṟintār kūṟum karuma poruḷ iṉitē
paṟṟu amaiyā vēntaṉkīḻ vāḻāmai muṉ iṉitē
teṟṟeṉavu iṉṟi teḷintārai tīṅku ūkkā
pattimaiyiṉ pāṅku iṉiyatu il


---



33. ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம்



33.  ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம்


ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே
தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது

எவை நன்மை தரும்:
மக்கள் சினம் கொள்ளாத வகையில் செயல்படுபவனின் முயற்சி, 
தானே சோம்பி இருக்காமல் செய்யும் முயற்சி, 
வாள்கள்  மோதும் போர்க்களத்தில் திருந்தாத மன்னரின் படையை முறியடித்தல், 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ūr muṉiyā ceytu oḻukum ūkkam mika iṉitē
tāṉē maṭintu irā tāḷāṇmai muṉ iṉitē
vāḷ mayaṅku maṇṭu amaruḷ māṟāta mā maṉṉar
tāṉai taṭuttal iṉitu

---



34. எல்லி பொழுது வழங்காமை



34.  எல்லி பொழுது வழங்காமை

எல்லிப் பொழுது வழங்காமைமுன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே
புல்லி கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது

எவை நன்மை தரும்:
இருளில் பயணம் செய்யாதிருப்பது, 
உரையாடலில் பிழையின்றி பேசக்கூடிய திறமை,
வலிய வந்து நட்பு பாராட்டுகின்ற, ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத வீணர்களின் உறவைத் தவிர்ப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Elli poḻutu vaḻaṅkāmai muṉ iṉitē
colluṅkāl cōrvu iṉṟi collutal māṇpu iṉitē
pulli koḷiṉum poruḷ allārtam kēṇmai
koḷḷā viṭutal iṉitu


---




35. ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல்



35.  ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல்


ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப்பாங்கறிதல்
வெற்வேறில் வேந்தர்க்கு இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்று இலனாய் பல்லுயிர்க்கும் பார்த்து உற்று பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது

எவை அரசுக்கு நன்மை தரும்:
ஒற்றரைக் குறித்தும் மற்ற ஒற்றரால் ஒற்று அறிந்து உண்மையறிவது, 
வழக்கை ஆராய்ந்து நீதி வழங்குவது, 
பற்றின்றி, அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்கும் பண்பைக் கொண்டிருப்பது,
ஆகியன அரசுக்கு நன்மை தருவனவாம்.

Oṟṟiṉāṉ oṟṟi poruḷ terital māṇpu iṉitē
muṉtāṉ terintu muṟaiceytal muṉ iṉitē
paṟṟu ilaṉāy palluyirkkum pārttu uṟṟu pāṅku aṟital
veṟṟi vēl vēntarkku iṉitu

---



36. அவ்வித்து அழுக்காறு உரையாமை



36.  அவ்வித்து அழுக்காறு உரையாமை


அவ்வித் தழுக்கா றுரையாமைமுன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே
செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே
கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது

எவை நன்மை தரும்:
மனம் திரிந்து பொறாமையைக் காட்டும் சொற்களைக் கூறாதிருப்பது,
நல்ல மனம் கொண்டவராய் சினத்தை ஒதுக்கி வாழ்வது, 
மனம் கவர்ந்தவற்றைக் கண்டதும் ஆசை கொண்டு அதைக் களவாடாது மறந்துவிடுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Avvittu aḻukkāṟu uraiyāmai muṉ iṉitē
cevviyaṉāy ceṟṟu ciṉam kaṭintu vāḻvu iṉitē
kavvi tām koṇṭu tām kaṇṭatu kāmuṟṟu
vavvār viṭutal iṉitu

---



37. இளமையை மூப்பு என்று உணர்தல்



37.  இளமையை மூப்பு என்று உணர்தல் 


இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே
தட மென் பணை தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது

எவை நன்மை தரும்:
இளவயதிலேயே முதுமை தரும் மனப்பக்குவம் கொண்டிருப்பது,   
உறவினர்கள் அன்புமொழிகள் கூறுபவராக இருப்பது, 
மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட தளிர் போன்ற இளம் பெண்கள் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிவடைவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Iḷamaiyai mūppu eṉṟu uṇartal iṉitē
kiḷaiñarmāṭṭu accu iṉmai kēṭṭal iṉitē
taṭa meṉ paṇai tōḷ taḷir iyalārai
viṭam eṉṟu uṇartal iṉitu


---



38. சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு



38.  சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு


சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென் பால்படுங்
கற்றா உடையான் விருந்து.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும்
கற்றா உடையான் விருந்து

எவை நன்மை தரும்:
சிறந்த போர்க் கருவிகளைத் தாங்கிய இளைஞர் படையைக் கொண்டிருப்பது, 
உறவினரைக் கொண்டவர் எதிரியின் படைக்கு அஞ்சாது அழித்து ஒழிக்கும் ஆற்றல் கொண்டிருப்பது, 
கன்றுடன் பால் தரும் பசுவும் கொண்டவர் அளிக்கும் விருந்து, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ciṟṟāḷ uṭaiyāṉ paṭaikkala māṇpu iṉitē
naṭṭār uṭaiyāṉ pakai āṇmai muṉ iṉitē
e tuṇaiyum āṟṟa iṉitu eṉpa pāl paṭum
kaṟṟā uṭaiyāṉ viruntu

---


39. பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை



39.  பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை


பிச்சைபுக் குணபான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபொலிசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது

எவை நன்மை தரும்:
பிச்சை பெற்று உண்டு வாழ்பவர் சினம் கொள்ளாதிருப்பது, 
ஒதுங்கி வாழ்ந்து துன்பத்தைத் தவிர்க்கும் பாங்கு, 
அதிக வருவாய்க்கு ஆசைகொண்டு  அறவழியை மீறி நடக்கும் மனத்தளர்ச்சி இல்லாதிருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Piccai pukku uṇpāṉ piḷiṟṟāmai muṉ iṉitē
tuccil iruntu tuyar kūrā māṇpu iṉitē
uṟṟa policai karuti aṟaṉ orū'um
oṟkam ilāmai iṉitu


---

40. பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு



40.  பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு


பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே
வித்து குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்

எவை நன்மை தரும்:
பற்றுள்ளவற்றைக் கொடுக்க வேண்டி இருந்தாலும் உள்ளூரில் வாழ்வது, 
விதைக்கென வைத்த தானியத்தைக் குற்றி உண்ணாத  மேன்மையான நிலை,  
பற்பல நாட்களும் குற்றமற்ற நன்மை தரும் நூல்களைக் கற்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Pattu koṭuttum pati iruntu vāḻvu iṉitē
vittu kuṟṟu uṇṇā viḻuppam mika iṉitē
paṟpala nāḷum paḻutu iṉṟi pāṅku uṭaiya
kaṟṟaliṉ kāḻ iṉiyatu il


---

இன்னா நாற்பதும் - இனியவை நாற்பதும்

இன்னா நாற்பதும் - இனியவை நாற்பதும்



          இன்னா நாற்பது பாடல்களுக்கும்  இனியவை நாற்பது பாடல்களுக்கும் கருத்தொற்றுமை மிகுதி. இன்னா நாற்பது இவையிவை துன்பம் தரும் என்று கூறினால், இனியவை நாற்பது  அவை இல்லாதிருத்தல் இனிமை என்று கூறும் வகையில் எதிர்மொழியாக அமைந்துள்ளது.  அந்தவகையில் கருத்தொற்றுமை உள்ள வரிகளுள்  ஒரு பத்து எடுத்துக்காட்டுகள் இங்கு ஒப்பிடும் நோக்கில் தரப்பட்டுள்ளது.

பிற உயிர்களின் உடலை உண்டு தன் உடலை வளர்த்துக் கொள்வது:
          ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே (இனியவை பாடல் - 4)
          ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா (இன்னா பாடல் - 22)

பிறன்மனை நோக்கா பேராண்மை:
          பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது (இனியவை பாடல் - 5)
          பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (இன்னா பாடல் - 38)

குழந்தைகள் நோய் வாய்ப்படுவது:
          குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (இனியவை பாடல் - 12)
          குழவிகள் உற்ற பிணி இன்னா (இன்னா பாடல் - 35)

உயிர்க்கொலை தவிர்ப்பது:
          கொல்லாமை முன்இனிது (இனியவை பாடல் - 5)
          புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா (இன்னா பாடல் - 12)

இருளில் வெளியில் செல்லாதிருப்பது:
          எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே (இனியவை பாடல் - 34)
          இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா (இன்னா பாடல் - 10)

உறவுகள் இல்லாத ஊரில் வாழாதிருப்பது:
          பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே (இனியவை பாடல் - 40)
          கட்டு இலா மூதூர் உறைவு இன்னா (இன்னா பாடல் - 25)

நன்னெறி நூல்களை விரும்பிக்  கற்பது:
          பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய கற்றலின் காழ் இனியது இல் (இனியவை பாடல் - 40)
          விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா (இன்னா பாடல் - 34)

அரசர் யானைப்படையைக்  கொண்டிருப்பது:
          மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை மத முழக்கம் கேட்டல் இனிது (இனியவை பாடல் - 15)
          யானை இல் மன்னரை காண்டல் நனி இன்னா (இன்னா பாடல் - 22)

பெரியோர் துணையைச் சேர்ந்திருத்தல்:
          இனிதே தெற்றவும் மேலாயார் சேர்வு (இனியவை பாடல் - 1)
          பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா (இன்னா பாடல் - 26)

தீயவர்களை விட்டு விலகி வாழ்வது:
          கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே (இனியவை பாடல் - 29)
          தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா (இன்னா பாடல் - 24)

          இன்னா நாற்பது பாடல்களில் காணப்படுவது போலவே; 
"யானையுடை படை காண்டல் மிக இனிதே" [பாடல் - 4] 
என்று யானைப்படை கொண்டிருப்பதன்  சிறப்பு போன்ற காலத்திற்குப் பொருந்திடாத கருத்தும், 
"ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே" [பாடல் - 23] 
என்று பார்ப்பனருக்குக் கொடை அளிப்பது  நன்மை தரும் என்ற காலத்திற்கு ஒவ்வாத கருத்தும்,  
"தட மென் பணை தோள் தளிர் இயலாரை விடம் என்று உணர்தல் இனிது" [பாடல் - 37] 
என்று பெண்மையைப் போற்றாது பெண்களை நஞ்சுடன் ஒப்பிடும் கருத்தும் 
தவிர்த்தால்  அறநெறி வழி நடக்க நூற்றுக்கும் குறையாத அறிவுரைகள் இனியவை நாற்பது பாடல்களில் உள்ளன. 



குறளும் - இனியவை நாற்பதும்


குறளும் - இனியவை நாற்பதும்




          அறம் அறிவுறுத்த எழுதப்பட்ட பாடல்கள் என்பதால் பல அறவுரைகள் ஏதேனும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்திச் செல்கிறது.  அவ்வாறான சில அறவுரைகளைக் குறளுடன் ஒப்பியல் நோக்கில் சுட்ட விரும்பினால், வள்ளுவர் அதற்காக ஒரு அதிகாரமே எழுதியுள்ளார் என்பதால் ஒரு குறளை நேரடியாகவும் பல குறள்கள் அறிவுறுத்தும் கருத்துக்களை மேலதிகத் தகவல் என்ற முறையிலும் பாடலின் விளக்கத்திற்காகக் கொடுக்கலாம். 

          கடவுள் வாழ்த்து தவிர்த்த 40 பாடல்களுள்,  பாதிக்கும் மேலாக  23 பாடல்களில் குறள் கருத்துக்களுக்கு நிகரான கருத்துகள் உள்ளன.  ஒரு சில பாடல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குறள் கருத்துகளையும் அடையாளம் காட்டுவதால், 33 குறள் சொல்லும் பொருட்களை அடையாளம் காண இயல்கிறது. 
இவை கீழ்க்காணும் அதிகாரங்களின் குறள்களாகும்:
1. அறன் வலியுறுத்தல், 2. மானம், 3. இரவு, 4. இன்னா செய்யாமை, 5. ஒழுக்கமுடைமை, 6. ஒற்றாடல், 7. தெரிந்து தெளிதல், 8. தெரிந்துவினையாடல், 9. பிறனில் விழையாமை, 10. புதல்வரைப் பெறுதல், 11. அரண், 12. அவை அஞ்சாமை, 13. அழுக்காறாமை, 14. அன்புடைமை, 15. ஆள்வினை உடைமை, 16. இல்வாழ்க்கை, 17. ஊக்கமுடைமை, 18. கல்லாமை, 19. கல்வி, 20. நிலையாமை, 21. புலால் மறுத்தல், 22. பேதைமை, 23. பொருள் செயல் வகை, 24. மடியின்மை, 25. விருந்தோம்பல், 26. வினைசெயல்வகை, 27. வெஃகாமை.


திருக்குறள் - ஒப்பீடு:

ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது   [பாடல்: 02]

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"   (குறள் - 46)

***

ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே   [பாடல்: 04]

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙன மாளு மருள்"   (குறள் - 251)

***

ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே   [பாடல்: 06]

"ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்"   (குறள் - 33)

***

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே   [பாடல்: 07]

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"   (குறள் - 134)

***

பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே   [பாடல்: 07]

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"   (குறள் - 506)

***

தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது   [பாடல்: 07]

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"   (குறள் - 834)

***

தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே   [பாடல்: 08]

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்பவான் வினை"   (குறள் - 758)

***

பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது   [பாடல்: 09]

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்"   (குறள் - 77)

***

உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா
பெருமை போல் பீடு உடையது இல்   [பாடல்: 11]

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"    (குறள் - 90)

***

கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே   [பாடல்: 12]

"உளரெனினும் இல்லாரோடொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்"   (குறள் - 730)

***

மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே   [பாடல்: 13]

"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை"   (குறள் - 964)

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"   (குறள் - 969)

***

ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது   [பாடல்: 13]

"கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"   (குறள் - 400)

"தம்மிற்றம் மக்களறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது"   (குறள் - 68)

***

குழவி தளர் நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே   [பாடல்: 14]

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"   (குறள் - 66)

***

பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது   [பாடல்: 15] 

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு"   (குறள் - 148)

"அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று"   (குறள் - 150)

***
நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே   [பாடல்: 17] 

"நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்"   (குறள் - 679)

***

பற்பல தானியத்ததாகி பலர் உடையும்
மெய் துணையும் சேரல் இனிது   [பாடல்: 17] 

"கொற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்"   (குறள் - 745)

"எல்லாப் பொருளும் உடைத்தா யிட
நல்லா ளுடைய தரண்"   (குறள் - 746)

***

கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே   [பாடல்: 25] 

"விலங்கொடு மக்களனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்"   (குறள் - 410)

***

மானம் பட வரின் வாழாமை முன் இனிதே   [பாடல்: 27] 

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"   (குறள் - 969)

***

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே   [பாடல்: 28]

"அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று"   (குறள் - 515)

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"   (குறள் - 517)

***

ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்   [பாடல்: 28]

"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்"   (குறள் - 139)

***

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே   [பாடல்: 29]

"ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை"   (குறள் - 594)

***

எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
ஒளி பட வாழ்தல் இனிது   [பாடல்: 29]

"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து"   (குறள் - 1057)

***

கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே   [பாடல்: 31]

"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இம்மை அரிதே வெளிறு"   (குறள் - 503)

***

தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல்   [பாடல்: 32]

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"   (குறள் - 314)

***

தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே   [பாடல்: 33]

"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு"   (குறள் - 613)

"மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்"   (குறள் - 602)

***

ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே   [பாடல்: 35]

"ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்"   (குறள் - 583)

"ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்"   (குறள் -  589)

***

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே   [பாடல்: 36]

"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும் "   (குறள் - 168)

***

செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே   [பாடல்: 36]

"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும்
ஏமாப் புணையைச் சுடும்"   (குறள் - 39)

***

கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது   [பாடல்: 36]

"நடுவின்றி நன்பொருள்வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்"  (குறள் - 171)

***

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே   [பாடல்: 39] 

"இரப்பான் வெகுளாமை வேண்டும்நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி"   (குறள் - 1060)

***

துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே   [பாடல்: 39] 

"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த வுயிர்க்கு"   (குறள் - 340)

***
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது   [பாடல்: 39] 

"சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு"   (குறள் - 31)

***

பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்   [பாடல்: 40] 

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"   (குறள் - 318)

***
______________________________________________________